மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களிடம் சுதந்திர தாகத்தை விதைத்துக் கொண்டிருந்தார். இதனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் பாரதியாருடன் தொடர்பு வைத்திருந்தனர்

அதை அறிந்திருந்த ஆங்கிலேயர்கள், ரகசிய போலீஸ் ஒருவரை அனுப்பி பாரதியாரின் நடவடிக்கை களைக் கவனிக்க விரும்பினர்.

சாமியார் வேடத்தில் ஓர் ரகசிய போக்ஸ் தயாரானார். அவர் பாரதியாரைச் சந்திக்க அனுமதி கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினார். பாரதியாரும் சம்மதம் தெரிவித்து அவருக்குப் பதில் கடிதம் அனுப்பினார்

ஒரு நாளில் அந்தச் சாமியார் சென்று பாரதியாரைச் சந்தித்தார். உடனே அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அவரையும் அவரது செயல்களையும் கவனித்த பாரதியார், அவர் உண்மையான சாமியார் அல்லர்: போலீஸ் உளவாளி என்பதை உணர்ந்து கொண்டார்

உடனே அவர் போலிச் சாமியாரைப் பார்த்து “சாமியார்கள் முதலில் யாருக்கும் வணக்கம் தெரிவிக்க மாட்டார்கள், மற்றவர்கள்தாம் முதலில் சாமியாருக்கு வணக்கம் தெரிவிப்பர்’ என்றார்.

அதைக் கேட்ட ரகசிய போலீஸ் திகைத்தார் பாரதியார் தொடர்ந்து, “வேறு வேலை கிடைக்க வில்லை என்றால் சாப்பாட்டுக்குப் பிச்சை எடு வெள்ளைக்காரனிடம் ரகசிய போலீசாய் வேலை செய்வதைவிட, பிச்சையெடுப்பது எவ்வளவோ மேல் ” என்றார்

அதைக் கேட்டுத் திடுக்கிட்ட ரகசிய போலீஸ்காரர் அவமானத்தால் தலைகுனிந்து அந்த இடத்தை விட்டுச் சென்றார்